Thursday, September 15, 2005

Phone-A-Friend

“Phone-A-Friend” – என்றான் மதி பதட்டம் தென்பட்ட நடுங்கிய குரலில், சற்று அதிகமாகவே வியர்த்திருந்த முகத்துடன்.

கூட்டத்தின் வியப்பொலி அரங்கத்தை அதிர வைத்தது.

ஆட்டத்தின் முதல் துருப்புச் சீட்டை மதி பயன்படுத்தியிருந்தான்.
கேள்வியின் எண் 15 – ஒரு கோடி ருபாய்க்கான கடைசி கேள்வி.

இதுவரை மதி எந்த துருப்புச் சீட்டையும் பயன்படுத்தவில்லை. யாருடைய உதவியும் தேவை இல்லாதவன் போலல்லவா ஆடிக்கொண்டிருந்தான்! ஒவ்வொரு கேள்விக்கும் செருக்கும், திமிரும் கலந்த தோரணையில் சரியான விடைகள்! தன்னுடைய ஆட்டத்தின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடுப்பும் களிப்பும் ஒரு சேர ஏற்படுத்தி இருந்தான் மதி. மதியின் நினைவாற்றலையும் அறிவையும் கண்டு, போட்டியின் நடத்துனராக விளங்கிய இந்தியாவின் பெருநடிகர்கூட பெரும் வியப்பில் தான் இருந்தார்.

இறுதிக் கேள்வியின் போது மதி துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை பார்வையாளர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில், மதி பதிலளித்த விதம், மதிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு ஊடல்-கூடல் உறவினை ஏற்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது. எடுத்துக்காட்டாக, சற்று நேரம் முன்னர், ஐந்தாவது கேள்வியின் போது மதி கூறியது அவனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவாளர்களை உருவாக்கவில்லை.

கேள்வி:
குடியரசு இந்தியாவுடன் கடைசியாக இணைந்த பகுதி எது?
A) கோவா, தாமன் மற்றும் தையு
B) தாத்ரா நகர் மற்றும் அவேலி
C) சிக்கிம்
D) புதுவை

மதி சற்று யோசித்ததைப் பார்த்து உயர பெருநடிகர்,
“உங்களிடம் இன்னமும் மூன்று துருப்பு சீட்டுகள் உள்ளன, நண்பரிடம் தொலைபேசலாம், 50-50, இல்லையேல் இதோ பார்வையாளரிடம் கேட்கலாம்” என்றார்.
“எனக்கே தெரியவில்லை என்றால் பார்வையாளர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதாவது உருப்படாத இந்தி சினிமா கேள்விக்கு வேண்டுமானால் அவர்கள் பதில் சொல்லுவார்கள்”, என்றான் மதி இந்தியில், கூட்டத்தின் கோபக் கூக்குரலுக்கு இடையே.

உண்மையில் பெருநடிகருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்னையும் என்னைப் போன்ற ஏராளமான கலைஞர்களை உருப்பட வைத்த இந்தி சினிமாவைப் பற்றி இப்படி சொல்கிறீர்களே, மதி. இருந்தாலும் இந்தி சினிமாவைப் பற்றி உங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி” என்று சிரித்துக் கொண்டே தன் கம்பீரத் தோரணையில் சமாளிக்கப் பார்த்தார். “சரி என்ன பண்ணலாம் என்று இருக்கிறீர்கள், பார்வையாளர் உதவி வேண்டாம் என்றால்?”. நிதானமாக யோசித்து “99% நம்பிக்கையுடன்” பதிலளிப்பதாகக் கூறி ஒரு விடையைத் தந்தான்.
“சிக்கிம், 1975இல்”.
அது நூறு விழுக்காடு சரியாக இருந்தது.

உண்மையில் ஐந்தாவது கேள்வி வரை கூட்டம் மதிக்கு அமோக அதரவு அளித்து வந்தது. காரணம், மதி தன்னை பற்றிக் கொடுத்த அறிமுகமும், அவனது திட்டமும். “உழவன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மதி, இந்திய அறிவியல் நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மரபணு உயிரியலில் முதுநிலை பட்டம் பெற்றவன்!

“வானம் பார்த்த காய்ந்த நிலங்களையும், நிலங்களின் விளைவைப் பார்த்த காய்ந்த வயிறுகளையும் கொண்ட ஒரு மறக்கப்பட்ட ஊர் என்னுடைய ஊர், செங்கதிர்” என்று மதி சொன்னது அங்கிருந்த பல காய்ந்த கண்கள் ஈரமடையச் செய்தது. இந்தியாவை மிதிவண்டியில் சுற்றி எதேனும் நான்கு எல்லைகளில் கால் பதிப்பதைத் தன் “சின்னப் பேராசை”யாகக் கொண்ட மதி, ஆய்வுப் படிப்பிற்கு சியாட்டில் செல்லாமல், செங்கதிரில் தங்கி தன் ஊரை வறுமையின் பிடியில் இருந்து விடிவிக்க தான் முயற்சிப்பதாக சொன்னபோது, கூட்டம் எழுந்து நின்று கைதட்டியது.

“நான் இந்த போட்டியில் ஒரு கோடி ஜெயிக்கத் தான் விளையாடுகிறேன். எனக்காக இல்லை இந்த பணம். என் ஊரின் முன்னேற்றத்துக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களுக்கு ஒரு கோடி கண்டிப்பாகத் தேவை” என்று திட்டவட்டமாக அறிவித்தான். அடிப்படை வசதிகளும் பணபுழக்கத்தைத் திரும்ப ஏற்படுத்தும் ஒரு வணிகச் சூழலை உருவாக்கப் போவதாக கூறினான்.

“செங்கதிரின் விடியலுக்கு இந்த ஒரு கோடி” என்று மதி கூறிய வார்த்தைகள் பலருக்கு புல்லரிப்பு ஏற்படுத்தினாலும், அவன் வார்தைகளில் கொஞ்சம் திமிரும் செருக்கும் கலந்திருப்பதாகவே சிலருக்குப் பட்டது. ஐந்தாவது கேள்வியின் போது அவன் கூறியது அதனை உறுதி செய்தது.

ஆனால் கூட்டத்தின் கோபம் நிரம்ப நேரம் நீடிக்கவில்லை. பத்தாவது கேள்வி வரும் போதே, மதியின் விடைகள் அவனது அறிவாற்றலை அனைவருக்கும் உணர்த்தியது. அவனது உயர்ந்த நோக்கத்தை நினைவுகூர்ந்த கூட்டம் மறுபடியும் அவன் பக்கம் சாய்ந்தது. பதினைந்தாவது கேள்விக்கு முன் “மதி, மதி” என்று கூட்டம் அவனுடைய பெயரைக் கத்திக் கொண்டிருந்தது.

கேள்வியை பெருநடிகர் படிக்க, திரையில் தோன்றியது.
தன்னுடைய மருத்துவ படிப்புக்கு நடுவே, இவர் “Le Pedorasa” என்ற தன்னுடைய மோட்டர் சைக்கிளில் தன் கண்டம் எங்கும் பயணம் செய்தார். இவர் மேற்கொண்ட பயணம், பிற்காலத்தில் நிகழ இருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்களுக்கு வித்தாக அமைந்தது. இவர் யார்?
A) Diego Rivieria
B) Che Guevera
C) Lech Walesa
D) Fidel Castro

“உங்களுக்கு நினைவுபடுத்தக் கூறுகிறேன் – இன்னமும் மூன்று துருப்பு சீட்டுகளும் அப்படியே இருக்கின்றன. விலகினால் 50 இலட்சம் உண்டு – ஆனால் செங்கதிருக்கு 1 கோடி தேவை என்று ஏற்கனவே கூறிவிட்டீர்கள். சந்தேகம், குழப்பம் இருந்தால், துருப்பு சீட்டுகளை பயன்படுத்துங்கள்”.

மதி கண்டிப்பாக பார்வையாளர் பதிலைக் கேட்கமாட்டான் என்று அனைவருக்கும் தெரியும். என்ன இருந்தாலும், பதினைந்தாம் கேள்வி என்றைக்குமே பார்வையாளர் கேள்வி கிடையாது. மதி நிரம்ப நேரம் கழித்து தன் முதல் துருப்புச் சீட்டை பயன்படுத்தினான்.
“யாரை அழைக்க விரும்புகிறீர்கள்?” என்றார் பெருநடிகர் தன் கணீர் குரலில்.
“குமாரசாமி from செங்கதிர், என்னோட அப்பா” என்றான்.

“குமாரசுவாமிஜி, मै ... बोल रहा हू, कौन बनेगा क्रोरपति से|”
“யார் நீங்க, உங்களுக்கு யாருங்க வேணும்?”
“Sir, he does not know hindi”.
“That’s okay Madhi, but I do know tamil. ரஜினிகாந்த், கமல்ஹாசன், நம்ம தோஸ்த். Your father has asked me something. யார் நீ, Who are you? That’s the question, correct? In fact I am quite pleased to answer his question, for the question is something that I am not often asked, atleast in these parts of the world. Let me give a brief bio – நான் உருப்படாத இந்தி சினிமாவில் ஒரு உருப்படாத நடிகர்.”
கூட்டம் சிரித்தது. மதி சிரிக்கவில்லை, அவன் இன்னமும் கேள்வியில் மூழ்கி இருந்தான். பதட்டத்துடன் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான்.
“என்ன புள்ளே சார் பெத்தர்கீங்க, என்ன answer சொல்றார்? என்ன பெரிய thoughts? நான் உங்கள சல்யூட் பண்றேன்! அரே வா” என்றார் நெகிழ்ச்சியுடன் குமாரசாமியிடம்.
“இப்ப உங்க பையன் உங்க help கேட்கறார், 50 lakhs win பண்ணிருக்கார்,செங்கதிர் needs another 50 lakh, அது உங்க கையிலே. Your time starts now!” என்று விரலசைத்தார்.

“எப்படிடா இருக்க மதி?”
“நல்லா இருக்கேன்பா, இதோ கேள்வி”
மதி கேள்வியைப் படிக்கத் தொடங்கினான். அவன் குரலின் நடுக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.


கேள்வியைப் படித்து முடிப்பதற்குள் 15 விநாடிகள் முடிந்துவிட்டன். மதி தொடர்ந்தான்.

“நான் இந்த கேள்வியை உங்க பதிலுக்காக கேட்கல. உங்ககிட்ட பேசணும் போல இருந்தது. என்னாலயே நம்ப முடியலப்பா. செங்கதிருக்கு விடியல் பொறந்தாச்சுப்பா. எனக்கு இந்த கேள்விக்கும் பதில் தெரியும்பா. MotorCycle Diaries. விடை Che Guevera.” என்று மதி தழுதழுத்தக் குரலில் சொல்லி முடிக்க, கூட்டம் மறுபடியும் எழுந்து நின்று கை தட்டத் தொடங்கியது.

“உங்கள் பதிலில் நம்பிக்கை தெரிகிறது. Lock செய்யலாமா?” என்றார் பெருநடிகர் தன் அதிரும் குரலில், மின்னும் வியர்வை முகத்துடன் அமர்ந்திருந்த மதியைப் பார்த்து.
-வினோத்
பி.கு: KBCயின் முன்னொடியான Who wants to be a millionaire? நிகழ்ச்சியின் முதல் Millionaire-ஆன John Carpenter வெற்றி பெற்ற நிகழ்ச்சியின் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட கற்பனைக் கதை இது. John Carpenter வருமான வரி அதிகாரி, ஆதலால் கூட்டத்தின் ஆதரவு இல்லாமல் ஆடினார். தன் முதல் Lifeline- Phone-A-Friendஐ ஆட்டத்தின் கடைசி கேள்வியின் போது பயன்படுத்தித் தன் தந்தைக்கு தன் வெற்றியை அறிவித்தார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

5 Comments:

Anonymous Anonymous said...

Interesting story. Made us feel, as if we r one among the audience. write more.

10:22 PM  
Anonymous Anonymous said...

Lively description of the contestant's and the audience thought processes makes us feel as though we are watching a Live KBC..
The final conversations between Madhi , his father and the host are beautifully written

11:03 PM  
Blogger Ramya Nageswaran said...

மற்றோரு நல்ல முயற்சி வினோத்.. good job!

3:02 AM  
Blogger வீ. எம் said...

மிக மிக அருமை வினோத்.. ரசித்துப்படித்தேன்.. ! வாழ்த்துக்கள்.

2:34 AM  
Blogger vin said...

Krishnamurthu, Bindhu, Ramya, V.M:
கதை படித்ததற்கும் உங்கள் கருத்தினை பின்னூட்டமிட்டதற்கும் நன்றி.

I always loved watching KBC and wanted to portray the gripping on-screen drama, that happens in KBC, that is in fact unique to this quiz show, since quiz shows tend to lack drama and are watched only by connoisseurs of quizzing. I learnt about the first ever show that created a millionaire in the original U.S version and decided to build an Indianized version of it keeping in mind the way KBC is conducted here.

-Vinodh
http://visai.blogspot.com

11:36 PM  

Post a Comment

<< Home